சோதிக்காதீங்கடா என்னைய- சீரியல் சோகங்கள்

serial sogangal sothikathangada

முற்றும் துறந்தவர்கள் முனிவர்கள். முற்றும் என்பதையே மறந்தவர்கள் இந்த மெகா சீரியல் எனப்படும் நெடுந்தொடர் இயக்குநர்கள். மணியோ பனிரெண்டு இதற்கு இல்லையா ஒரு எண்டு என்பதுபோல் நெடுந்தொடர்கள் நிதமும் நம்மைச் சோதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. சீரியலில் மட்டுமே காணக் கிடைக்கின்ற கண்ணராவிக் காட்சிகள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட அட்ராசிட்டிகள் சிலவற்றை இங்கு காண்போம்.

  • கலைந்துபோன தலை. கசங்கிப்போன சேலை, கொடூரமான கொட்டாவி இப்படித்தானே வீட்டில் பெண்கள் தூக்கத்திலிருந்து எழுவார்கள். ஆனால் நெடுந்தொடர்களில் அழகாக தலைசீவி, பவுடர் அடித்து பொட்டெல்லாம் வைத்து ஃபுல் மேக்கப்பில்தான் தூங்கி எழுகிறார்கள் இந்த மெகா சீரியல் பெண்கள். தூக்கத்துலகூட மேக்கப் தூக்கலா இருக்குற துயரம் இங்கேதான் நடக்கும்.
  • யாராவது ஒருவர் அழுதுகொண்டே இருக்கிறார், யாராவது ஒருவர் இன்னொருவரைப் பழிவாங்கத் துடிக்கிறார், யார் குடியையாவது கெடுக்க நினைக்கிறார் என கெட்டவர்களாலும், கேடுகெட்டவர்களாலும் நிறைந்திருக்கிறது சீரியல் உலகம். எப்பயாச்சும் இப்படின்னா ஓக்கே.. எப்பவுமே இப்படின்னா எப்படி?
  • வருடக்கணக்கில் கர்ப்பமாய் இருக்கும் இயற்கையை மீறிய அதிசயங்கள் நடப்பது இங்கேமட்டும்தான். அதே சமயத்தில் கர்ப்பமான பக்கத்துவீட்டுப் பெண்ணின் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்திருக்கும். ஆனால் சீரீயல் கர்ப்பிணிக்குக் குழந்தையே பிறந்திருக்காது.
  • எல்லா வீட்டிலும் இருப்பது போன்ற இயல்பான பாத்திரங்களைச் சீரியலில் பார்ப்பது மிகக் கடினம். லுங்கி கட்டுன ஆண், நைட்டி போட பெண்லாம் உங்க உலகத்துல இல்லவே இல்லையா சீரிய கில்லர்களே!
  • ஃபுல் மேக்கப்போடு, மடிப்பு கலையாத சேலையில் ஒருவர் இருப்பார். அவர் வெளியில் கிளம்புவதாக் காட்சி வரும்போது, இருங்க ரெடியாயிட்டு வந்துடறேன் என்பார்.  அரைச்ச மாவை எதுக்கு திருப்பி அரைக்கணும் அய்யமாரே!
  • லிப்ஸ்டிக், ஐப்ரோ த்ரெடிங்க் என எல்லா வகையிலும் அல்ட்ரா மாடர்னாக இருக்கும் பெண்கள், தாலி என்று வந்துவிட்டால், தாத்தா பாட்டியை ஓவர்டேக் செய்வதும் மூட நம்பிக்கையில் முழ்கித் திளைப்பதும் சீரியலில்தான் நடக்கிறது.
  • நகைகளில் எத்தனை வகை உண்டோ அத்தனையையும் அள்ளிப்போட்டு ஒரு பெண்மணி ஹைபிட்சில் யாராவது கத்துகிறார் என்றால் அவர் வில்லி என்று பொருள். நம் இல்லங்களில் எந்தப் பெரியம்மாவோ, சித்தியோ, சகோதரியோ, அத்தையோ யாரும் இப்படிச் செய்து பார்த்திருக்கீங்க. இந்த அரிய வகை ஜீவராசிகள் எல்லாம் சீரியலில் மட்டுமே காணக்கிடைப்பார்கள் !
  • மாமியார்- மருமகள் இல்லாத சீரியலைக்கூட பார்ப்பது எளிது. சாமியார் இல்லாத சீரியலைப் பார்ப்பது கடினம். மாமியார், சாமியார் இரண்டு பேரும் பண்ற அலப்பறைங்க இருக்கே.. அப்பப்பா. முற்றும் துறந்த சாமியார் வர்றப்பவே சீரியலுக்கும் ஒரு முற்றும் போடுங்கப்பா!
  • ஒரு சீரியலை உட்கார்ந்து பார்ப்பதே கடினம். இதில் மெகா சங்கமம் என்ற பெயரில் இரண்டு சீரியலையும் சேர்ந்து செய்யும் அலப்பறைகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் எதிரிக்கும் வாய்க்கக் கூடாது!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *